Monday, June 24, 2013

ஊரு சனம் தூங்கிருச்சு



பாடல்         : ஊரு சனம் தூங்கிருச்சு
படம்           : மெல்லத் திறந்தது கதவு
பாடியவர்       : எஸ். ஜானகி
எழுதியவர்     :
இசை          : இசைஞானி & மெல்லிசை மன்னர்

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு!
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே (2)

1.         குயிலு கருங்குயிலு மாமன் மனக் குயிலு
கோலம் போடும் பாட்டாலே!
மயிலு இளம் மயிலு மாமன் கவிக்குயிலு
ராகம் பாடும் கேட்டாலே
சேதி சொல்லும் பாட்டாலே!
ஒன்ன எண்ணி நானே
உள்ளம் வாடிப் போனேன்!
கன்னிப் பொண்ணுதானே,
என் மாமனே என் மாமனே
ஒத்தையிலே அத்த மக
ஒன்ன நெனச்சி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடயே
காலம் நேரம் கூடயே - ஊரு சனம்

2.         மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா!
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா
மாமன் காதில் ஏறாதா!
நெலாக் காயும் நேரம்
நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும்
இந்த நேரந்தான், இந்த நேரந்தான்
ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன்,
ஓலப் பாய போட்டு வச்சேன்
இஷ்டப்பட்ட ஆச மச்சான்
என்ன ஏங்க ஏங்க வச்சான் - ஊரு சனம்


‘மெல்லத் திறந்தது கதவு’ படத்திற்கு இசைஞானியும் மெல்லிசை மன்னரும் இணைந்து பணியாற்ற முடிவெடுத்த சம்பவத்தைப் பற்றி, திரு. ஏ.வி.எம். சரவணன் கூறியது தினத்தந்தி ‘வரலாற்றுச் சுவடுகளிலிருந்து..

இரண்டு இசை மேதைகள் இணைந்து இசையமைப்பது என்பது ஆச்சரியமான விஷயம்’. 1985ம் ஆண்டு ஒரு நாள் பாரதிராஜா திடீரென்று டெலிபோன் செய்தார். “சார்..! நானும் இளையராஜாவும் உங்களைப் பார்க்க வீட்டுக்கு வரலாம் என்றிருக்கிறோம்” என்றார்.

இருவரும் வந்தார்கள்.

”எம்.எஸ்.விஸ்வநாதன் இப்போது கொஞ்சம் சிரமத்தில் இருக்கிறார். அவருக்கு ஒரு படம் எடுத்து உதவி செய்தால் நன்றாக இருக்கும்” என்று யோசனை சொன்னார்கள். அப்போது நாங்கள் நிறைய படங்கள் எடுத்துக்கொண்டிருந்தோம். அந்த யோசனையை நான் உடனே ஏற்றுக்கொண்டேன்.

என் தந்தையாருக்கு மெல்லிசை மன்னரின் பாடல்கள் மட்டுமல்ல. அவர் பண்புகளும் மிகவும் பிடிக்கும். அவரது மனதில் நிறைந்திருந்த மனிதர்களில் எம்.எஸ்.வி.யும் ஒருவர். ஒருமுறை அப்பச்சி (ஏ.வி.எம்.) என்னை அழைத்து, ‘விஸ்வநாதனை மட்டும் என்றைக்கும் விட்டுவிடாதே. அவருக்கு எப்போது எந்த சிரமம் ஏற்பட்டு அது உனக்குத் தெரியவந்தாலும் அவருக்கு உதவி செய்யத் தயங்காதே” என்று சொன்னார். மெல்லிசை மன்னரை எனக்கும் மிகவும் பிடிக்கும். அவர் மீது எனக்கு மிகவும் மரியாதை உண்டு.

பாரதிராஜாவும், இளையராஜாவும் சொன்னதும், எம்.எஸ்.வி.க்கு உதவ வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்டப் படம்தான் ‘மெல்லத் திறந்தது கதவு’.

இளையராஜாதான் அந்தப் படத்திற்கு இசையமைப்பதாக இருந்தது. “நானும் எம்.எஸ்.வி. அண்ணாவும் சேர்ந்து இந்தப் படத்துக்கு மியூஸிக் பண்றோமே” என்று ராஜா கேட்டபோது எனக்கு அந்த ஐடியா பிடித்திருந்தது. இரண்டு இசைமேதைகளும் இணைந்து அந்தப் படத்தில் பணியாற்றினார்கள் என்பது தனிச்சிறப்பாக அமைந்தது” என்று குறிப்பிட்டிருந்தார்.

’ஊருசனம்..!’ என்ன ஒரு அழகான, இயல்பான வார்த்தை.  இருபது முப்பது வருடங்களுக்கு முன்னர் காதலித்த காதலர்கள் சமூகத்தைக் குறித்து அதிகம் கவலைப்பட்டார்கள் / பயப்பட்டார்கள். அவர்கள் காதல் ‘ஊர்” சார்ந்து இருந்தது.  “ஊரெல்லாம் உன் பாட்டுத்தான்”, “உன்னையும் என்னையும் வச்சு ஊரு சனம் கும்மியடிக்குது”, “ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்”, “எங்க ஊர் காதலைப் பத்தி” என்று நிறைய ”ஊர்” பாடல்களும், எங்க ஊரு பாடுக்காரன்/காவல்காரன் என்று படங்களும் இதற்குச் சான்று. 2000க்குப் பின்னர் காதல் என்பது காதலன் காதலி ஆகிய இருவருக்குள் ஏற்படும் பிரச்சனை மட்டுமே என்ற அளவில் சுருங்கிப் போயிற்று. ’ஊருசனம்’ போன்ற பாடல்களும் மறைந்துபோயிற்று.

கீபோர்டில் Chords தேட உட்கார்ந்ததில் ’கிர்ர்ர்’ராகிப் போனது. இணையத்தில் மேய்ந்து.. ஒரு Skeleton எடுத்து கொஞ்சம் நம்ம அறிவுக்கு எட்டிய வரை பட்டி-டிங்கரிங் பார்த்ததில் ஒரு வரிக்கு 3 Chords..! கண்டிப்பாய் இவற்றை விட Advanced Chords இருக்கும். தெரிந்தவர்கள் தெரிவிக்க. பாடல் முழுவதும் ஒரு இடத்தில் நில்லாமல் வரிக்கு வரி Chords அலைபாய்ந்துகொண்டே செல்லும் Sequence, பிரமிப்பு…!  Play பண்ணிப் பார்க்கும்போதே நான் மிகவும் ரசித்தது G# Minor’ல் போய்க்கொண்டே இருக்கும் பாடல், சரணத்தில் ‘ஒன்ன எண்ணி நானே’ வரியில் G# Major’க்கு Shift ஆகித் திரும்பும் இசைஞானி மந்திரம்.

ஊரு ச / G#m னம் / E  தூங்கிருச் / G# சு
ஊதக் / G# காத்தும் அடிச்சிருச் / C#m சு / E
பாவி ம / D#m னம் / F# தூங்கலை / B யே / G#m
அதுவும் / E ஏனோ / D# புரியலை / G#m யே

1.         / G#m குயிலு கருங்குயிலு மாமன் மனக் குயிலு
கோலம் போடும் / B பாட்டாலே / G#m
/ F# மயிலு இளம் மயிலு மாமன் கவிக்குயிலு
/ B ராகம் பாடும் / G#m கேட்டாலே
/ B சேதி சொல்லும் / G#m பாட்டாலே!
/ G# ஒன்ன எண்ணி நானே
/ C# உள்ளம் வாடிப் / F# போ / B னேன்!
/ D#7 கன்னிப் பொண்ணு / B தானே,
/ F# என் மாம / G#m னே / F# என் மாம / G#m னே
ஒத்தையி / G#m லே / E  அத்த ம / G#
ஒன்ன / G# நெனச்சி ரசிச்ச ம/ C#m / E
கண்ணு ரெண் / D#m டும் / F# மூடலை / B யே / G#m
காலம் / E நேரம் / D# கூடலை / G#m யே

பாடலில், இசைஞானி தன்னுடைய செல்லக்குழந்தையான வயலினை எப்படி ஒரு இடத்தில் கூட பயன்படுத்தாமல் விட்டார் என்பது ஆச்சரியமே. சில மாதங்களுக்கு முன் ராஜ் டி.வி.யின் ‘Beach Girls’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரு. கங்கை அமரன் அவர்கள் தெரிவித்த செய்தி, இந்தப் பாடலின் மூன்றாவது BGM’ல் வரும் Keyboard Punches எல்லாம் வாசித்தது அந்த சமயம் இசைஞானியிடம் பணியாற்றிக்கொண்டிருந்த ஏ.ஆர்.ரகுமான்.

சமீபத்தில் நண்பர் நாகசொக்கநாதன் எழுதிய “இளையராஜா எனும் பாடலாசிரியர்” எனும் பதிவில் ட்வீட்டர் Vijay SA அழகான பின்னூட்டம் ஒன்றைக் கொடுத்திருந்தார்.
         
MSV ஐ விட திறமையில் பலபடிகள் ராஜா மேல் தான் என்றாலும், ராஜாவுக்கு MSV குரு, முன்னோடி, வழிகாட்டி. எனவே MSVஐ எப்போது சந்தித்தாலும், ராஜா அவராகவே அணுகிப்பேசுவார், குருபக்தியை வெளிக்காட்டுவார். ராஜா நல்ல, திறமையான, நேர்மையான சிஷ்யராக நடந்துகொள்வதால் MSVக்கும் ராஜாவால் பெருமை தான், சந்தோஷம் தான்! எனவே தான் இருவருக்கும் இடையில் ஒரு அழகான குரு-சிஷ்யன் உறவு நீடிக்கிறது! குருவும் சிஷ்யனும் இணைந்து இசையமைக்கும் அதிசயமும் நடைபெறுகிறது!

MSV குரு என்பதால் அவர் இறங்கிவந்து ராஜாவிடம் கேட்கமுடியாது. ஆனால் ராஜா சிஷ்யர் என்பதால் MSVயிடம் சென்று அனுமதி கேட்டு அதன்பிறகே இருவரும் சேர்ந்து இசையமைக்கிறார்கள்”.

     இசைஞானிக்கும் மெல்லிசை மன்னருக்குமான அற்புதமான உறவை இதைவிட அழகாகச் சொல்லிவிடமுடியாது. 

     இன்று (24-06-2013) தனது 84வது பிறந்தநாளைக் காணும் மெல்லிசை மன்னருக்கு என் இனிய பிறந்தநாள் வணக்கங்கள்.

நன்றி: ’வரலாற்றுச் சுவடுகள்’ தினத்தந்தி .